11ஆம் திருமுறையின் 'மூத்த நாயனார் திருஇரட்டை மணிமாலை' - பாராயண வெண்பா பாடல்கள்

மகா கணபதியைப் போற்றும் இத்தனிப்பாடல் தொகுப்பினை அருளிச் செய்துள்ளவர் கபிலதேவ நாயனார். வெண்பா; அடுத்து ஒரு கட்டளைக் கலித்துறைப் பாடல் எனும் இவ்விரு மணிகளால் (அந்தாதி முறையில்) கோர்வையாகப் புனையப் பெறுவது 'திரு இரட்டை மணி மாலை' எனும் பிரபந்த வகையாகும். அவ்வகையில் இத்தொகுப்பில் 10 வெண்பாக்களும் 10 கட்டளைக் கலித்துறைப் பாடல்களும் இடம்பெறுகின்றன. அவற்றுள் விக்னேஸ்வர மூர்த்தியின் அளப்பரிய பெருமைகளைப் பறைசாற்றும் அமிழ்தினும் இனிதான, பாராயணம் புரிவதற்கும் மிக எளிதான வெண்பாக்களை மட்டும் இப்பதிவில் சிந்தித்து மகிழ்வோம்,
-
(திருப்பாடல் 1)
திருவாக்கும்; செய்கருமம் கைகூட்டும்; செஞ்சொல்
பெருவாக்கும்; பீடும்பெருக்கும்; உருவாக்கும்
ஆதலால் வானோரும் ஆனை முகத்தானைக்
காதலால் கூப்புவர்தம் கை.

(திருப்பாடல் 3):
அடியமர்ந்து கொள்வாயே நெஞ்சமே; அப்பம்
இடிஅவலோடெள் உண்டை கன்னல் வடிசுவையில்
தாழ்வானை; ஆழ்வானைத் தன்னடியார் உள்ளத்தே
வாழ்வானை வாழ்த்தியே வாழ்.

(திருப்பாடல் 5):
விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான்
விநாயகனே வேட்கை தணிவிப்பான்; விநாயகனே
விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாம்; தன்மையினால்
கண்ணிற் பணிமின் கனிந்து

(திருப்பாடல் 7):
யானை முகத்தான்; பொருவிடையான் சேய்;அழகார்
மான மணிவண்ணன் மாமருகன்; மேல்நிகழும்
வெள்ளக் குமிழி மதத்து விநாயகன்;என்
உள்ளக் கருத்தின் உளன்

(திருப்பாடல் 9):
கணம்கொண்ட வல்வினைகள், கண்கொண்ட நெற்றிப்
பணம்கொண்ட பாந்தள் சடைமேல் மணம் கொண்ட
தாதகத்த தேன்முரலும் கொன்றையான் தந்தளித்த
போதகத்தின் தாள்பணியப் போம்.

(திருப்பாடல் 11):
ஏத்தியே என்உள்ளம் நிற்குமால் எப்பொழுதும்
மாத்தனி வெண்கோட்டு மதமுகத்துத் தூத்தழல்போல்
செக்கர்த் திருமேனிச் செம்பொன் கழல்அங்கை
முக்கண் கடாயானை முன்

(திருப்பாடல் 13):
சரணுடையேன் என்று தலை தொட்டிருக்க
முரண்உடையேன் அல்லேன் நான்; முன்னம் திரள்நெடுங்கோட்(டு)
அண்டத்தான் அப்புறத்தான்; ஆனைமுகத்தான்; அமரர்
பண்டத்தான் தாள்பணியாப் பண்டு.

(திருப்பாடல் 15):
வேட்கை வினைமுடித்து மெய்யடியார்க்(கு) இன்பம் செய்து
ஆட்கொண்டருளும் அரன்சேயை; வாட்கதிர்கொள்
காந்தார மார்பில் கமழ்தார்க் கணபதியை;
வேந்தா உடைத்தமரர் விண்.

(திருப்பாடல் 17):
பெருங்காதல் என்னோடு, பொன்னோடை நெற்றி
மருங்கார வார்செவிகள் வீசி ஒருங்கே
திருவார்ந்த செம்முகத்துக் கார்மதங்கள் சோர
வருவான்தன் நாமம் வரும்

(திருப்பாடல் 19):
களியானைக் கன்றைக் கணபதியைச் செம்பொன்
ஒளியானைப் பாரோர்க்குதவும் அளியானைக்
கண்ணுவதும் கைத்தலங்கள் கூப்புவதும் மற்றவன்தாள்
நண்ணுவதும் நல்லார் கடன்

அபிராமி பட்டர் அருளியுள்ள 'கள்ள விநாயகர் பதிகம்':

அபிராமி பட்டர் ஒப்புவமையில்லாத (100 திருப்பாடல்களைக் கொண்ட) அபிராமி அந்தாதிப் பனுவலோடு பின்வரும் பாடல் தொகுப்புகளையும் அருளிச் செய்துள்ளார், 
-
1. அபிராமி அம்மைப் பதிகம் 1 - (11 திருப்பாடல்கள்)
2. அபிராமி அம்மைப் பதிகம் 2 - (11 திருப்பாடல்கள்)
3. கள்ள (வாரண) விநாயகர் பதிகம் - (10 திருப்பாடல்கள்)
4. அமிர்தகடேஸ்வரர் பதிகம் - (10 திருப்பாடல்கள்)
5. கால சம்ஹார மூர்த்தி பதிகம் - (10 திருப்பாடல்கள்)
6. கால சம்ஹார மூர்த்திப் பின்முடுகு - (10 திருப்பாடல்கள்) 

இவற்றுள் இப்பதிவில் கள்ள (வாரண) விநாயகர் பதிகத் திருப்பாடல்களைச் சிந்தித்து மகிழ்வோம். 
-
(குறிப்பு: பெரும்பாலான வலைத்தளங்களில் இப்பதிகத் திருப்பாடல்கள் பற்பல சொற்பிழைகளோடு காணப் பெறுகின்றது. இப்பதிவில் அப்பிழைகள் யாவுமே திருத்தப் பெற்று தொகுக்கப் பெற்றுள்ளது). 
-
(திருப்பாடல் 1)
பங்கயத்தாளும் ஒருநான்கு தோளும் படாமுகமும்
திங்களின் கோடும் வளர் மோதகத்துடன் செங்கையிலே
அங்குச பாசமுமாகி வந்(து) என்றனை ஆண்டருள்வாய்;
வெங்கயமே கடவூர் வாழும் கள்ள விநாயகனே!

(திருப்பாடல் 2)
உண்ணும் பொழுதும் உறங்கும் பொழுதும் ஒருதொழிலைப்
பண்ணும் பொழுதும் பகரும் பொழுதும் நின் பாதத்திலே
நண்ணும் கருத்துத் தமியேனுக்(கு) என்றைக்கு நல்குவையோ?
விண்ணும் புகழ்க் கடவூர் வாழும் கள்ள விநாயகனே!

(திருப்பாடல் 3)
யாதொன்றையாகிலும் எண்ணிய போ(து) உன் இணைக்கமல
பாதம் பரவிய பேர்கட்கலாது பலித்திடுமோ?
பேதம் தெரிந்த மறையோர் தமது பெருந்தெருவில்
வேதம் பயில் கடவூர் வாழும் கள்ள விநாயகனே!

(திருப்பாடல் 4)
அரன் என்பவனையும் அம்புயத்தோனையும் ஆழிசங்கு
கரன் என்பவனையும் கைதொழ வேண்டி உன் கால்தொழுவார்
இரவும் பகலும் இயலிசை நாடகமென்னும் நன்னூல்
விரவும் தமிழ்க் கடவூர் வாழும் கள்ள விநாயகனே!

(திருப்பாடல் 5)
துதியேன் எனினும் தொழுகேன் எனினும் தொழுபவர்தமை
மதியேன் எனினும் வணங்கேன் எனினும் வலியவந்து
கதியே தரும்வழி காட்டிடுவாய் நின் கருணையினால்
விதியே புகழ்க் கடவூர் வாழும் கள்ள விநாயகனே!       

(திருப்பாடல் 6)
நாகம் துரகம் பலபணி ஆடை நவநிதிகள்
பாகஞ்சு மென்மொழியாள் போகமும் உன்றன் பாதமதில்
மோகம் திகழப் பணிந்தோர்க்(கு) அலாமல் முயன்றிடுமோ?
மேகம் பயில் கடவூர் வாழும் கள்ள விநாயகனே!         

(திருப்பாடல் 7)
இளங்கும் சரச்செழும் கன்றே எனச்சொலி ஏத்திநன்றாய்
உளம் கசிந்(து) அங்கையால் குட்டிக் கொண்டோர்க்கோர் குறையுமுண்டோ?
வளம்கொண்ட மூவர் தமை மறித்தே தமிழ் மாலைகொண்டு
விளங்கும் புகழ்க் கடவூர் வாழும் கள்ள விநாயகனே!        

(திருப்பாடல் 8)
தண்டாயுதத்தையும் சூலாயுதத்தையும் தாங்கியென்னைக்
கண்டாவி கொள்ள நமன் வரும் வேளையில் காத்திடுவாய்
வண்டாரவாரம்செய் மாமலர்ச் சோலை வளப்பமுடன்
விண்தாவிய கடவூர் வாழும் கள்ள விநாயகனே!

(திருப்பாடல் 9)
மூவரும் தங்கள் தொழிலே புரிந்திட முந்திமுந்தித்
தாவரும் நெற்றியில் தாக்கியுன் நாமத்தைச் சாற்றிடுவார்
தேவரும் போற்றிய தேவே! உனையன்றித் தெய்வமுண்டோ?
மேவரும் சீர்க் கடவூர் வாழும் கள்ள விநாயகனே!       
-
(குறிப்பு): 
இங்கு 'மூவரும்' என்று அபிராமி பட்டர் குறிப்பது பிரமன்; திருமால் மற்றும் உருத்திரனையே. சிவபரம்பொருள் இம்மூர்த்திகளினின்றும் வேறுபட்டு விளங்கும் தன்மையர். 

(திருப்பாடல் 10)
மைப்பொரு வாரண மாமுக மீதினில் வாய்ந்த துதிக்
கைப்பொருளே என்று கைதொழுவோர்க்குன் கருணை வைப்பாய்;
பொய்ப் பணியோர் அறியா(த) அமுதீசன் புகழும்எங்கள்
மெய்ப்பொருளே கடவூர் வாழும் கள்ள விநாயகனே!