விநாயக வணக்கத்துடன் துவங்கும் (5000 ஆண்டுகள் பழமையான) திருமந்திரம் (ஆதாரபூர்வ விளக்கங்கள்):

பன்னிரு சைவத் திருமுறைகளிலும், வெவ்வேறு காலகட்டங்களில் தோன்றியுள்ள எண்ணிறந்த அருளாளர்களின் திருப்பாடல்களிலும் விநாயகப் பெருமானைப் போற்றும் குறிப்புகள் இடம்பெற்றிருப்பினும், '7ஆம் நூற்றாண்டிற்கு முன்னதான காலகட்டத்தில் விநாயக வழிபாடு சிறப்புற்று விளங்கியிருக்கவில்லை' எனும் பொய்ப் பிரச்சாரத்தை நிறுவுவதிலேயே ஒரு சாராருக்கு அதீத ஆர்வம். இனி பதிவிற்குள் செல்வோம், 

7ஆம் நூற்றாண்டு அருளாளரான சுந்தர மூர்த்தி நாயனார் 'நம்பிரான் திருமூலன் அடியார்க்கும் அடியேன்' என்று  போற்றியிருப்பதனால் திருமூல நாயனார் சுந்தரருக்கு முற்பட்ட காலத்தவர் என்பது தெளிவு. 'எவ்வளவு ஆண்டுகள் முற்பட்டவர்?' எனும் வினாவிற்கான விடையினைப் பின்வரும் பெரிய புராணத் திருப்பாடல்கள் வாயிலாகச் சிந்தித்துத் தெளிவுறுவோம், 

(1)
'இப்புவியிலுள்ளோர் பிறவி நோயினின்றும் விடுபட்டு உய்வு பெறும் பொருட்டு, ஆண்டொன்றிற்கு ஒரு திருப்பாடல் வீதம், சரியை; கிரியை; யோகம்; ஞானமாகிய 4 மலர்களைக் கொண்டு, பரம்பொருளான சிவபெருமானைப் போற்றும் திருமந்திர மாலையினை அருளிச் செய்துள்ளார் திருமூலர்' என்று தெய்வச் சேக்கிழார் பதிவு செய்கின்றார், 
-
(பெரிய புராணம் - திருமூல தேவ நாயனார் புராணம்: திருப்பாடல் 26):
ஊனுடம்பில் பிறவிவிடம் தீர்ந்துலகத்தோருய்ய
ஞானமுதல் நான்குமலர் நல்திருமந்திர மாலை
பான்மைமுறை ஓராண்டுக்கொன்றாகப் பரம்பொருளாம்
ஏனஎயிறணிந்தாரை ஒன்றவன் தானென எடுத்து!!!

(2)
மேலும் பின்வரும் திருப்பாடலில், '(சிவயோகப் பயிற்சியினால்) மூவாயிரம் ஆண்டுகள் இப்புவியில் வாழ்ந்திருந்து, (ஆண்டொன்றிற்கு ஒரு திருப்பாடல் வீதம்) 3000 திருப்பாடல்களைக் கொண்ட திருமந்திர சாத்திர லை அருளிச் செய்துள்ளார் திருமூலர்' என்றும் சேக்கிழார் பெருமான் பதிவு செய்கின்றார், 
-
(பெரிய புராணம் - திருமூல தேவ நாயனார் புராணம்: திருப்பாடல் 27):
முன்னியஅப் பொருள்மாலைத் தமிழ் மூவாயிரம் சாத்தி
மன்னிய மூவாயிரத்தாண்டு இப்புவிமேல் மகிழ்ந்திருந்து
சென்னி மதியணிந்தார் தம் திருவருளால் திருக்கயிலை
தன்னில்அணைந்து ஒருகாலும் பிரியாமைத் தாளடைந்தார்.

ஆதலின் திருமூலர் '7ஆம் நூற்றாண்டிற்கும் 3000 ஆண்டுகள் முற்பட்ட அருளாளர் (அதாவது இன்றிலிருந்து சுமார் 4400 ஆண்டுகளுக்கு முன் தோன்றியவர்)' என்பது தெளிவு. 'கலியுகத்தின் துவக்க காலகட்டமே (அதாவது சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன்னர்) திருமூல நாயனாரின் அவதாரக் காலம்' என்பது ஆய்வாளர்களின் இறுதிக் கருத்து.

சிவபரம்பொருள் அருளிச் செய்துள்ள ருக்; யஜுர்; சாம; அதர்வண வேதங்களின் சாரத்தினைத் தமிழாக்கித் தருவதே திருமூலரின் அவதார நோக்கம் ('என்னை நன்றாக இறைவன் படைத்தனன் தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே' என்பது திருமந்திர வாக்கு). 'சிவயோகியான நம் திருமூலர் பிரணவமுகப் பெருங்கடவுளான விநாயகப் பெருமானைப் போற்றிய பின்னரே தன்னுடைய சாத்திர நூலை அருளிச் செய்துள்ளார்' எனில் தமிழர் மரபிலுள்ள விநாயக வழிபாட்டின் தொன்மை நன்கு விளங்குமன்றோ!
-
ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்தடி போற்றுகின்றேனே

திருஞானசம்பந்தர் தேவாரத்தில் விநாயகப் பெருமானின் திருஅவதாரம்:

விநாயகப் பெருமானின் தோற்றப் பகுதியினை விளக்கும் இரு கந்தபுராணத் திருப்பாடல்களை முதலில் சிந்தித்து, பின்னர் சம்பந்தப் பெருமானின் தேவாரத்திற்குள் பயணிப்போம். 

(1)
திருக்கயிலையிலுள்ள ஓவிய மண்டபத்தில், பிரணவ மந்திரம் பொறிக்கப் பெற்றிருந்த ஓவியமொன்றினை உமையன்னை பார்த்திருந்த சமயத்தில், சிவபரம்பொருளின் திருவருளால் அப்பிரணவமானது இரு யானைகளின் உருவு கொண்டு சங்கமிக்கின்றது,
-
(தக்ஷ காண்டம்: கயமுகன் உற்பத்திப் படலம் - திருப்பாடல் 142)
பாங்கரில் வருவதொர் பரமன் ஆணையால்
ஆங்கதன் நடுவணில் ஆதியாகியே
ஓங்கிய தனியெழுத்(து) ஒன்றிரண்டதாய்த்
தூங்கு கைம்மலைகளில் தோன்றிற்றென்பவே

அச்சங்கமத்திலிருந்து, மூன்று திருக்கண்களோடும், ஐந்து திருக்கரங்களோடும், மும்மதங்கள் பொழியும் திருவாயுடனும், யானையின் திருமுகத்துடனும், சிவசக்தியரின் அருள்வடிவினராய் நம் விநாயகப் பெருமான் தோன்றி வெளிப்படுகின்றார், 

(2)
(தக்ஷ காண்டம்: கயமுகன் உற்பத்திப் படலம் - திருப்பாடல் 148)
அக்கணத்தாயிடை ஐங்கரத்தவன் அருள்
முக்கண் நால்வாயினான் மும்மதத்தாறு பாய்
மைக்கரும் களிறெனும் மாமுகத்தவன் மதிச்
செக்கர்வார் சடையன்ஓர் சிறுவன் வந்தருளினான்

(3)
இனி மேற்குறித்துள்ள நிகழ்வினை விவரிக்கும் சம்பந்த மூர்த்தியின் தேவாரத் திருப்பாடலைக் காண்போம், 
-
(திருவலிவலம் - சம்பந்தர் தேவாரம்: திருப்பாடல் 5)
பிடியதன் உருஉமை கொளமிகு கரியது
வடிகொடு தனதடி வழிபடும் அவரிடர்
கடிகணபதி வர அருளினன் மிகுகொடை
வடிவினர் பயில்வலி வலமுறை இறையே.
-
'பிடி' எனும் பதம் பெண் யானையைக் குறிக்க வந்தது, திருவருளால் 'ஓம்' எனும் பிரணவ மந்திரம் ‘சக்தி தத்துவமான பெண் யானையாகவும்; சிவ தத்துவமான ஆண் யானையாகவும்’ உருவெடுத்துச் சங்கமிக்க, அந்த தத்துவ சங்கமத்தினின்றும், அடியவர்களின் இடர் களையும் பரம்பொருள் வடிவினராய் நம் கணபதி தோன்றுகின்றார் ('கரி' எனும் பதம் யானையைக் குறிக்க வந்தது). 

(4)
சம்பந்தப் பெருமான் 'பொங்கு வெண்புரி' என்று துவங்கும் மற்றுமொரு சீர்காழித் திருப்பதிகப் பாடலிலும், 'கரியின் மாமுகமுடைய கணபதி தாதை' என்று போற்றுகின்றார், 
-
(சீர்காழி - சம்பந்தர் தேவாரம்: திருப்பாடல் 3)
கரியின் மாமுகமுடைய கணபதி தாதை; பல்பூதம் 
திரிய இல்பலிக்கேகும் செழுஞ்சுடர் சேர்தரு மூதூர்
சரியின் முன்கை நன்மாதர் சதிபட மாநடமாடி
உரிய நாமங்களேத்தும் ஒலிபுனல் காழி நன்னகரே .

சைவ சமயம் 'இல்லது தோன்றாது; உள்ளது அழியாது' எனும் சற்காரிய வாதத்தினை அடிப்படையாகக் கொண்டது. ஆதலின் 'நம் விநாயகப் பெருமான் முன்பில்லாது இருந்து பின்னர் புதிதாகத் தோன்றிய மூர்த்தியன்று, என்றுமே நிலைபெற்று விளங்கும்; அம்பிகையோடு கூடிய சிவமாகிய பரம்பொருளின் மற்றுமொரு அருள் வடிவமே' எனும் தெளிவான புரிதலோடு; விக்னேஸ்வர மூர்த்தியின் திருவடிகளை இச்சதுர்த்தித் திருநாளில் போற்றிப் பணிவோம்.

நாவுக்கரசு சுவாமிகள் தேவாரத்தில் விநாயகப் பெருமானைப் பற்றிய அற்புத அற்புதமான குறிப்புகள்:

தேவார மூவரில், சம்பந்த மூர்த்தியும் சுந்தரரும் 'கணபதி' எனும் திருநாமத்தை மட்டுமே குறித்திருக்க, 'விநாயகன்' எனும் அற்புதத் திருநாமத்தைத் தம்முடைய திருப்பாடல்களில் பதிவு செய்துள்ளவர் நம் அப்பர் சுவாமிகள் மட்டுமே என்பதொரு அற்புதக் குறிப்பு.  

(1)
'கொடிமாட நீள்தெருவு' என்று துவங்கும் திருப்புறம்பயத் திருப்பதிகத்தில், 'விக்கின விநாயகன்' என்று குறிக்கின்றார்,
-
(திருப்புறம்பயம் - அப்பர் தேவாரம் - திருப்பாடல் 10)
கோவாய இந்திரன் உள்ளிட்டாராகக்
    குமரனும் விக்கின விநாயகன்னும்
பூவாய பீடத்து மேல்அயன்னும்
    பூமியளந்தானும் போற்றிசைப்பப்
பாவாய இன்னிசைகள் பாடியாடிப்
    பாரிடமும் தாமும் பரந்து பற்றிப்
பூவார்ந்த கொன்றை பொறி வண்டார்க்கப்
    புறம்பயம் நம்ஊரென்று போயினாரே

(2)
திருவாய்மூரில் சம்பந்தப் பெருமானுக்கும்; நாவுக்கரசு சுவாமிகளுக்கும் சிவபரம்பொருள் அம்மையப்பராய்; சிவகணங்கள் சூழ்ந்திருக்கும் திருக்கோலத்தில் திருக்காட்சி தந்தருள, அச்சமயத்தில் அப்பர் அடிகள் போற்றிசைத்த திருப்பதிகப் பாடலில் 'மெல்லியலும் விநாயகனும் தோன்றக் கண்டேன்' என்று பதிவு செய்கின்றார், 
-
(திருவாய்மூர் - அப்பர் தேவாரம் - திருப்பாடல் 8 )
பொருந்தாத செய்கை பொலியக் கண்டேன்
    போற்றிசைத்து விண்ணோர் புகழக் கண்டேன்
பரிந்தார்க்கருளும் பரிசும் கண்டேன்
    பாராய்ப் புனலாகி நிற்கை கண்டேன்
விருந்தாய்ப் பரந்த தொகுதி கண்டேன்
    மெல்லியலும் விநாயகனும் தோன்றக் கண்டேன்
மருந்தாய்ப் பிணிதீர்க்குமாறு கண்டேன்
    வாய்மூர் அடிகளை நான் கண்டவாறே

(3)
'மானேறு கரமுடைய வரதர் போலும்' என்று துவங்கும் திருவீழிமிழலைத் திருப்பதிகப் பாடலில், விநாயகப் பெருமான் கயமுகாசுரனை சம்ஹாரம் புரிந்தருளிய நிகழ்வினை 'கைவேழ முகத்தவனைப் படைத்தார் போலும் கயாசுரனை அவனால் கொல்வித்தார் போலும்' என்று பதிவு செய்து போற்றுகின்றார்,
-
(திருவீழிமிழலை - அப்பர் தேவாரம் - திருப்பாடல் 4)
கைவேழ முகத்தவனைப் படைத்தார் போலும் 
    கயாசுரனை அவனால் கொல்வித்தார் போலும்
செய்வேள்வித் தக்கனைமுன் சிதைத்தார் போலும்
    திசைமுகன்தன் சிரமொன்று சிதைத்தார் போலும்
மெய்வேள்வி மூர்த்தி தலையறுத்தார் போலும்
    வியன் வீழிமிழலைஇடம் கொண்டார் போலும்
ஐவேள்வி ஆறங்கம் ஆனார் போலும்
    அடியேனை ஆளுடைய அடிகள் தாமே

(4)
'சொல்லானைப் பொருளானை' என்று துவங்கும் திருநாரையூர் திருப்பதிகப் பாடலில், 'அறுமுகனோ(டு)  ஆனைமுகற்(கு) அப்பன் தன்னை' என்று நயம்பட குறித்துப் போற்றுகின்றார்,
-
(திருநாரையூர் - அப்பர் தேவாரம் - திருப்பாடல் 7)
தக்கனது வேள்விகெடச் சாடினானைத்
    தலைகலனாப் பலியேற்ற தலைவன் தன்னைக்
கொக்கரை சச்சரி வீணைப் பாணியானைக்
    கோணாகம் பூணாகக் கொண்டான் தன்னை
அக்கினொடும் என்பணிந்த அழகன் தன்னை
    அறுமுகனோ(டு)ஆனைமுகற்(கு) அப்பன் தன்னை
நக்கனை வக்கரையானை நள்ளாற்றானை
    நாரையூர் நன்னகரில் கண்டேன் நானே

(5)
'உரித்தவன் காண்' என்று துவங்கும் திருக்கச்சி ஏகம்பத் திருப்பதிகப் பாடலில், 'கடமா முகத்தினாற்குத் தாதை காண்' என்று போற்றுகின்றார்,
-
(திருக்கச்சி ஏகம்பம் - அப்பர் தேவாரம் - திருப்பாடல் 9)
முந்தைகாண் மூவரினும் முதலானான் காண்
    மூவிலைவேல் மூர்த்திகாண்; முருக வேட்குத்
தந்தைகாண்; தண்கடமா முகத்தினாற்குத்
    தாதைகாண்; தாழ்ந்தடியே வணங்குவார்க்குச்
சிந்தைகாண்; சிந்தாத சித்தத்தார்க்குச்
    சிவனவன் காண்; செங்கண்மால் விடையொன்றேறும்
எந்தைகாண்; எழிலாரும் பொழிலார் கச்சி
    ஏகம்பன் காண்; அவன்என் எண்ணத்தானே

(6)
'சுண்ண வெண் சந்தனச் சாந்தும்' என்று துவங்கும் திருவதிகைத் திருப்பதிகப் பாடலில் கணபதி எனும் திருநாமத்தைக் குறிப்பதோடு மட்டுமல்லாமல் ஒரு அற்புத நுட்பத்தையும் வெளிப்படுத்துகின்றார். 'ஒன்றன்பின் ஒன்றாக எதன் மீதாவது ஓயாத பற்று கொண்டுழல்வோரின் மனதில் எழுந்தருளி, அம்மாயையிலிருந்து அவர்களை விடுவித்து; வேட்கை தணிவித்து; முத்திநெறியினை நோக்கி இட்டுச் செல்பவர் கணபதி' என்று போற்றுகின்றார். 
-
'பலபல காமத்தராகிப் பதைத்தெழுவார் மனத்துள்ளே கலமலக்கிட்டுத் திரியும் கணபதியென்னும் களிறு' எனும் வரிகளுக்கு நேரடையாகப் பொருள் கொள்ளுதல் பிழை. சான்றோர்கள் இவ்வரிகளுக்கு அற்புதமான விளக்கங்களை அளித்து விநாயகப் பெருமானைப் போற்றியுள்ளனர். சிந்தித்து உய்வு பெறவேண்டிய திருப்பாடல் வரிகள் இவை, 
-
(திருவதிகை வீரட்டானம் - அப்பர் தேவாரம் - திருப்பாடல் 5)
பலபல காமத்தராகிப் பதைத்தெழுவார் மனத்துள்ளே
கலமலக்கிட்டுத் திரியும் கணபதியென்னும் களிறும்
வலமேந்திரண்டு சுடரும் வான் கயிலாய மலையும்
நலமார் கெடிலப் புனலும் உடையார்ஒருவர் தமர்நாம்
அஞ்சுவது யாதொன்றும்இல்லை அஞ்ச வருவதுமில்லை!!

நம்பியாண்டார் நம்பிகள் போற்றும் திருநாரையூர் பொள்ளாப் பிள்ளையார்:

சிதம்பரத்திலிருந்து 18 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது திருநாரையூர், திருஞானசம்பந்தர் மற்றும் நாவுக்கரசு சுவாமிகளால் பாடல் பெற்றுள்ள சிறப்புப் பொருந்தியது. அடிப்படையில் சிவத்தலமாக விளங்கும் இவ்வாலயத்தில் விநாயகப் பெருமான் 'பொள்ளாப் பிள்ளையார்' எனும் திருநாமத்துடன் ஆச்சரியமாய் எழுந்தருளி இருக்கின்றார். 'பொள்ளா' எனும் பதம் 'உளியால் செதுக்கப்படாத சுயம்புத் தன்மையை' குறிக்க வந்தது, இம்மூர்த்தியின் திருநாமம் நாளடைவில் மருவி 'பொல்லாப் பிள்ளையார்' என்று தற்பொழுது பிரசித்தமாக அறியப்பட்டு வருகின்றார்.

பன்னிரு சைவத் திருமுறைகளுள், 11 திருமுறைகள் வரையிலும் தொகுத்தளித்தவராகவும், 11ஆம் திருமுறையின் ஆசிரியர்களுள் ஒருவராகவும் விளங்கும் நம்பியாண்டார் நம்பிகளின் அவதாரத் தலமாகவும் இத்திருத்தலம் திகழ்கின்றது. சிறு பிராயத்தில், நிவேதன உணவினைப் பொல்லாப் பிள்ளையார் ஏற்கவில்லையே என்று பெரிதும் ஏங்கி வருத்தமுற்றுத் தன் இன்னுயிரையும் மாய்க்கத் துணிந்த நாள் முதல், அனுதினமும் நேரில் தோன்றி நம்பிகளுடன் உரையாடியவாறே நிவேதன உணவை உண்டு அருள் புரிவாராம் இப்பொல்லாப் பிள்ளையார். 
அது மட்டுல்லாது, பால்ய பருவத்திலிருந்தே நம்பிகளைத் தம்முடைய சீடராகவும் ஏற்று ஞானாசிரியராகவும் விளங்கிப் பேரருள் புரிந்துள்ளார் இப்பிள்ளையார். அடியார்க்கு எளியரான இம்மூர்த்தியே 'தேவாரத் திருமுறைகள் தில்லைத் திருக்கோயிலில், திருக்காப்பிட்ட ஓர் அறையினுள் இருப்பதனை' நம்பிகளுக்கு அறிவித்து அருள் புரிந்தவர். நம்பிகள் இப்பிள்ளையாருக்கென 20 திருப்பாடல்களால் கோர்க்கப்பெற்றுள்ள 'திருநாரையூர் விநாயகர் திருஇரட்டைமணி மாலை' எனும் அரிய பாடல் தொகுப்பினை 11ஆம் திருமுறையில் அருளிச் செய்துள்ளார்.
-
(திருநாரையூர் விநாயகர் திருஇரட்டைமணி மாலை - திருப்பாடல் 1):
என்னை நினைந்தடிமை கொண்டென் இடர்கெடுத்துத்
தன்னை நினையத் தருகின்றான் - புன்னை
விரசுமகிழ் சோலை வியன் நாரையூர் முக்கண்
அரசு மகிழ் அத்தி முகத்தான்
-
(திருநாரையூர் விநாயகர் திருஇரட்டைமணி மாலை - திருப்பாடல் 7):
மருப்பையொரு கைக்கொண்டு நாரையூர் மன்னும்
பொருப்பையடி போற்றத் துணிந்தால் - நெருப்பை
அருந்த எண்ணுகின்ற எறும்பன்றே அவரை
வருந்த எண்ணுகின்ற மலம்

விநாயக வணக்கத்துடன் துவங்கும் பெரிய புராணம்:

'என்ன பெரிய புராணம் விநாயக வணக்கத்துடன் துவங்குகின்றதா?', 'உலகெலாம் உணர்ந்து ஓதற்கரியவன்' எனும் துவக்கத் திருப்பாடல் தில்லைப் பரம்பொருளான நடராஜப் பெருமானையன்றோ போற்றுகின்றது? எனும் வினா எழுவது இயல்பே, இனி பதிவிற்குள் செல்வோம், 

(1)
தில்லைத் திருத்தலத்தில் சேக்கிழார் பெருமான் பெரிய புராண மாகாவியத்தை எழுதத் துவங்கும் சமயத்தில், பொன்னம்பலம் மேவும் சிற்சபேசப் பரம்பொருள் அசரீராய் 'உலகெலாம்' என்று அடியெடுத்துக் கொடுத்துப் பேரருள் புரிகின்றார். கூத்தர் பிரானின் பெருங்கருணையை நினைந்துருகிக் கண்ணீர் பெருக்கி, அடியெடுத்துக் கொடுத்த ஆடல்வல்லானைப் போற்றுமுகமாக முதல் திருப்பாடலை அருளிச் செய்கின்றார் தெய்வச் சேக்கிழார், 
-
(பெரிய புராணம் - திருமலைச் சருக்கம்: திருப்பாடல் 1)
உலகெலாம் உணர்ந்(து) ஓதற்கரியவன்
நிலவுலாவிய நீர்மலி வேணியன்
அலகில் சோதியன் அம்பலத்தாடுவான்
மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்

(2)
பின்னர் 2ஆம் திருப்பாடலில், தில்லையில் திருக்கூத்தியற்றும் பொன்னம்பலப் பரம்பொருளின் திருவடிகளைத் தரிசித்துத் தொழுவதே இப்பிறவிக் கடலினின்றும் மீள்வதற்கான அரியதொரு உபாயமென்று அறிவுறுத்துகின்றார், 
-
(பெரிய புராணம் - திருமலைச் சருக்கம்: திருப்பாடல் 2)
ஊனடைந்த உடம்பின் பிறவியே
தானடைந்த உறுதியைச் சாருமால்
தேனடைந்த மலர்ப்பொழில் தில்லையுள்
மாநடம் செய் வரதர் பொற்றாள்தொழ

(3)
மேற்குறித்துள்ள இரு திருப்பாடல்களும், 'அடியெடுத்துக் கொடுத்தருளிய முக்கண் முதல்வருக்கு நன்றி பாராட்டு முகமாக நம் சேக்கிழார் பெருமானின் உள்ளத்தினின்றும் வெளிப்பட்டுள்ளது' என்பது தெளிவு. இதனைத் தொடர்ந்து வரும் 3ஆம் திருப்பாடலில் பிரணவ முகத்துக் கடவுளான நம் விநாயகப் பெருமானைப் போற்றிப் பணிகின்றார் சேக்கிழார் அடிகள், 
-
(பெரிய புராணம் - திருமலைச் சருக்கம்: திருப்பாடல் 3)
எடுக்கும் மாக்கதை இன்தமிழ்ச் செய்யுளாய்
நடக்கும் மேன்மை நமக்கருள் செய்திடத்
தடக்கை ஐந்துடைத் தாழ்செவி நீள்முடிக்
கடக்களிற்றைக் கருத்துள் இருத்துவாம்
-
'பிறவிப் பிணியிலிருந்து யாவரையும் மீட்டெடுக்கவல்ல, திருத்தொண்டர்களைப் போற்றும் இம்மெய்மையான வரலாற்று நிகழ்வுகள் முழுவதும் அற்புதத் திருப்பாடல்களாய் அமைந்து வெளிப்பட்டு; யாவருக்கும் நன்மை செய்ய, ஐந்து திருக்கரங்களையும்; தாழ்ந்து அசையும் இரு திருச்செவிகளையும்; நீள்முடியையும் கொண்டருளும், மதம் பொருந்திய வேழ முகத்துக் கடவுளான விக்னேஸ்வரரின் திருவருளை வேண்டிப் பணிவோம்' என்று சேக்கிழார் பெருமானார் போற்றுகின்றார்.

விநாயக வணக்கத்துடன் துவங்கும் கச்சியப்ப சிவாச்சாரியாரின் கந்தபுராணம்:

காஞ்சிபுரத்தில், சுமார் 10 முதல் 11ஆம் நூற்றாண்டு காலகட்டத்தில் ஆதி சைவ மரபில் தோன்றிய அருளாளர் கச்சியப்ப சிவாச்சாரியார். தமிழ்; வடமொழி இரண்டிலுமே பெரும் புலமை கொண்டிருந்த தகைமையாளர். சமய; விசேட; நிர்வாண தீட்சைகளுடன் ஆச்சாரிய அபிஷேக நிலையையும் எய்தியிருந்த பெருந்தகையார். தந்தையாரைத் தொடர்ந்து குமரக் கோட்டத் திருக்கோயிலில் அர்ச்சகராகவும் விளங்கி வழிபாடியற்றி வருகின்றார்.   

இப்பெருமகனாரின் கனவில் எழுந்தருளிச் செல்லும் குமரக் கோட்ட வேலவன், 'அன்பனே, வேத வியாசனின் வடமொழி ஸ்காந்த புராணத்திலுள்ள சங்கர சம்ஹிதையில், சிவரகசிய கண்டத்தின் முதல் ஆறு பகுதிகளைத் தமிழில் இயற்றுவாயாக' என்று கட்டளையிட்டு, 'திகட சக்கரச் செம்முகம் ஐந்துளான்' என்று அடியெடுத்தும் கொடுத்துப் பேரருள் புரிகின்றான். 

ஆறுமுகப் பெருமானின் திருவருள் திறத்தினை வியந்து போற்றும் கச்சியப்ப சிவாச்சாரியார், கந்தவேள் அளித்தருளிய முதலடியுடன் துவங்கும், பின்வரும் விகட சக்கர விநாயக வணக்கப் பாடலுடன் (10,345 திருப்பாடல்களைக் கொண்ட) கந்தபுராணத்தினை அருளிச் செய்கின்றார், 
-
(கந்தபுராணம் - விநாயக வணக்கத் திருப்பாடல்)
திகட சக்கரச் செம்முகம் ஐந்துளான்,
சகட சக்கரத் தாமரை நாயகன்,
அகட சக்கர இன்மணி யாவுறை
விகட சக்கரன் மெய்ப்பதம் போற்றுவாம்!!
-
(பொருள்)
இனி மேற்குறித்துள்ள திருப்பாடலின் ஒவ்வொரு வரிக்குமான பொருளையும் சிந்தித்து மகிழ்வோம்,
-
(திகட சக்கரச் செம்முகம் ஐந்துளான்)
திகழ்கின்ற தசக் கரங்களையும் (10 திருக்கரங்களையும்), ஐந்து திருமுகங்களையும் கொண்டருள்பவர் ஆதிப்பரம்பொருளான சிவபெருமான் 
-
(சகட சக்கரத் தாமரை நாயகன்)
சிவமூர்த்தி திரிபுர சம்ஹார காலத்தில் நால்வேதப் புரவிகள் பூட்டிய திருத்தேரில் எழுந்தருளிச் செல்லுகையில், அத்தேருக்கு சக்கரமாக விளங்கியவன் (தாமரை நாயகனான) சூரிய தேவன்
-
(அகட சக்கர இன்மணி யாவுறை)
'அகடு அசக்கரம்' என்பது பாடல் நயத்திற்காக அகட சக்கரமாயிற்று. 'அகடு' என்பது திருவயிற்றையும், 'அசக்கரம்' என்பது பெரியதொரு பாம்பையும் சுட்ட வந்தது. பிரணவ முக தெய்வமான விநாயகப் பெருமான் தனது திருவயிற்றில் பாம்பொன்றினை 'உதரபந்தனம்' எனும் ஆபரணமாகச் சூடியிருப்ப்பார். 'விக்னேஸ்வர மூர்த்தி விஸ்வரூப திருக்கோலத்துடன் தோன்றி அருள் புரிகையில், அளவில் மிக பிரமாண்டமாக விளங்கும் சூரிய கிரக தேவனும் அவருடைய திருவயிற்று ஆபரணத்தின் இடையிலுள்ள சிறுமணியெனத் திகழ்கின்றான்' என்பது இவ்வரியின் உட்கருத்து. 
-
(விகட சக்கரன் மெய்ப்பதம் போற்றுவாம்)
'இத்தகு சீர்மையும் மேன்மையும் பொருந்திய விகட சக்கர விநாயக மூர்த்தியின் பொன்னார்த் திருவடிகளைப் போற்றுவோம்' என்று கச்சியப்ப சிவாச்சாரியார் பணிந்தேத்துகின்றார். 

காஞ்சியின் தல விநாயகரான இம்மூர்த்தி ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயிலுள், இறைவரின் திருச்சன்னிதிக்கு செல்லும் பிரதான வழியில் அல்லாமல், ஆயிரங்கால் மண்டபத்தில்; இறைவர் விழாக்காலத்தில் வெளிவரும் கோபுர வாயிலுக்கு இடப்புறம் எழுந்தருளி இருக்கின்றார். கச்சி ஏகம்பமெனும் இவ்வாலயத்தினைத் தரிசிக்கச் செல்லுகையில் அவசியம் 'விகட சக்கர' விநாயகக் கடவுளைத் தரிசித்துப் பணிந்து நலமெலாம் பெற்று வாழ்வோம்.

விநாயக வணக்கத்துடன் துவங்கும் திருவிளையாடல் புராணம் (ஆதாரபூர்வ விளக்கங்கள்):

அகச் சந்தானக் குரவர்களுள் ஒருவராகப் போற்றப் பெறும் பரஞ்சோதி முனிவரும், திருவிளையாடல் புராண ஆசிரியரான பரஞ்சோதி முனிவரும் ஒருவரல்லர் எனும் முக்கியக் குறிப்பினை முதற்கண் உள்ளத்தில் இருத்துதல் வேண்டும். சந்தானக் குரவரான பரஞ்சோதி முனிவர் கால வரையறைகள் யாவையும் கடந்து முற்பட்டு விளங்குபவர், முன்னமே சிவமுத்திப் பேறு பெற்றுள்ள சிவபுண்ணிய சீலர், மெய்கண்ட தேவரின் குருநாதர். 

மற்றொருபுறம் திருவிளையாடல் புராண ஆசிரியரான பரஞ்சோதி முனிவரோ 16ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் தோன்றிய அருளாளர். அவதாரத் தலம் நாகை மாவட்டத்திலுள்ள வேதாரண்யம், தமிழ்; வடமொழி இலக்கண இலக்கியங்களில் பெரும்புலமை கொண்டிருந்த தகைமையாளர். மதுரையில் சிவதீக்ஷை பெற்றுத் துறவு வழியில் நின்ற பெருந்தகையார். சிவமுத்தித் தலம் 'திருவாரூர் மாவட்டத்தில், திருத்துறைப்பூண்டி வட்டத்திலுள்ள சேகல் (மடப்புரம்) எனும் சிற்றூர்'. இங்குள்ள பரஞ்ஜோதீஸ்வரர் ஆலயமே இப்பெருமகனாரின் ஜீவசமாதித் திருக்கோயிலாகும். 

ஒரு சமயம் சோமசுந்தரப் பரம்பொருளின் காதலியாராகவும், மதுரைப் பேரரசியாகவும், நால்வேதத் தலைவியாகவும் விளங்கியருளும் நம் மீனாட்சியம்மை பரஞ்சோதியாரின் கனவில் எழுந்தருளிச் சென்று, 'வடமொழி ஹாலாஸ்ய புராணத்தில் இடம்பெறும் சொக்கநாதப் பெருமானின் திருவிளையாடல்களைத் தொகுத்துத் தீந்தமிழில் புனையுமாறு கட்டளையிட்டு, 'சத்தியாய்' என்று அடியெடுத்தும் கொடுத்துப் பேரருள் புரிகின்றாள். 

இது மொழிபெயர்ப்பு நூலல்ல, பரஞ்சோதி முனிவர் மூல நூலிலுள்ள நிகழ்வுகளை மட்டும் உள்வாங்கிக் கொண்டு, வேதாகமங்கள்; சைவ சித்தாந்த சாத்திரங்கள்; பன்னிரு திருமுறைகள் இவைகளின் சாரப் பிழிவினை ஆங்காங்கே வெளிப்படுத்தி, அற்புதத்திலும் அற்புதமான ஆலவாய்ப் பரம்பொருளின் 64 திருவிளையாடல்களை 3363 திருப்பாடல்களாகப் புனைந்து அருளியுள்ளார். 

ஆலவாய்ப் பேரரசி அளித்தருளிய 'சத்தியாய்' எனும் முதற்சொல்லோடு, பிரணவ முகக் கடவுளான விநாயகப் பெருமானைப் போற்றியவாறு தன் புராணத்தினைத் துவக்குகின்றார் பரஞ்சோதி முனிவர்,
-
(திருவிளையாடல் புராணம் - விநாயக வணக்கத் திருப்பாடல்), 
சத்தியாய்ச் சிவமாகித் தனிப்பர 
முத்தியான முதலைத் துதிசெயச் 
சுத்தியாகிய சொற்பொருள் நல்குவ 
சித்தி யானைதன் செய்யபொற் பாதமே 
-
(பொருள்):
'சத்தி; சிவம் எனும் வடிவினராய் விளங்கி, சிவமுத்திப் பேற்றினை அளித்தருளும் முதற்பொருளான சொக்கநாதப் பரம்பொருளின் திருவிளையாடல்களைப் புனைந்து போற்றுதற்கு, அற்புதக் கருத்துக்களோடு கூடிய தூய்மையான சொற்கள் அமைந்து வெளிப்பட, சித்தி விநாயகப் பெருமானின் பொன்போலும் திருவடிகளைப் பணிந்தேத்துவோம்' என்று போற்றுகின்றார் பரஞ்சோதி முனிவர்.