விநாயக வணக்கத்துடன் துவங்கும் சைவ சித்தாந்த சாத்திரங்கள் (ஆதாரபூர்வ விளக்கங்கள்):

முதற்கண் 14 சைவ சித்தாந்த சாத்திரங்களையும், அவைகளை அருளிச் செய்துள்ள 6 ஆச்சாரியர்களையும் காண்போம், 

1. திருவுந்தியார் - (திருவியலூர் உய்ய வந்த தேவ நாயனார்)
2. திருக்களிற்றுப்படியார் - (திருக்கடவூர் உய்ய வந்த தேவ நாயனார். இவர் திருவுந்தியார் ஆசிரியரின் மாணவராவார்)
3. சிவஞான போதம் - (மெய்கண்ட தேவர்)
4. சிவஞான சித்தியார் - (அருணந்தி சிவாச்சாரியார். இவர் மெய்கண்ட தேவரின் ஞான சீடராவார்)
5. இருபா இருபஃது  - (அருணந்தி சிவாச்சாரியார்) 
6. உண்மை விளக்கம் - (மனவாசகம் கடந்தார். இவர் மெய்கண்ட தேவரின் மாணாக்கர்களுள் ஒருவர்)
7. சிவப்பிரகாசம் - (உமாபதி சிவாச்சாரியார். இவர் அருணந்தி சிவாச்சாரியாரின் சீடரான மறைஞான சம்பந்தரின் ஞான சீடராவார்)
8. திருவருட்பயன் - (உமாபதி சிவாச்சாரியார்) 
9. வினாவெண்பா - (உமாபதி சிவாச்சாரியார்) 
10. போற்றிப் பஃறொடை - (உமாபதி சிவாச்சாரியார்)
11. கொடிக்கவி - (உமாபதி சிவாச்சாரியார்) 
12. நெஞ்சுவிடு தூது - (உமாபதி சிவாச்சாரியார்) 
13. உண்மை நெறி விளக்கம் - (உமாபதி சிவாச்சாரியார்)
14. சங்கற்ப நிராகரணம் - (உமாபதி சிவாச்சாரியார்)

சிந்தாந்த ஞானாசிரியர்களுள் உமாபதி சிவாச்சாரியார் மட்டுமே 8 சாத்திர நூல்களை இயற்றியளித்துள்ளார். 

இனி விநாயகப் பெருமானின் வணக்கப் பாடலுடன் துவங்கும் நான்கு சித்தாந்த ஆச்சாரியார்களின் திருப்பாடல்களை இப்பதிவில் சிந்தித்து மகிழ்வோம்,  
-
(1)
திருநாரையூர் பொல்லாப் பிள்ளையாரின் திருவடி மலர்களைப் போற்றியவாறு மெய்கண்ட தேவர் தன் சிவஞானபோதமெனும் சாத்திரத்தைத் துவங்குகின்றார், 
-
(சிவஞானபோதம் - மெய்கண்ட தேவர்)
கல்லால் நிழல்மலை
வில்லார் அருளிய
பொல்லார் இணைமலர்
நல்லார் புனைவரே

(2)
'விநாயகப் பெருமானைப் போற்றித் துதித்து வழிபடுவோரின் அஞ்ஞானம் முற்றிலுமாய் விலகுவதோடல்லாமல், பிரமன்; திருமால் ஆகியோரின் செல்வங்களும் அளவில் சிறியதே என்றெண்ணும் வகையிலான (வீடுபேறான) திருவருட் செல்வத்தைப் பெற்று மகிழ்வர்' என்று அருணந்தி சிவாச்சாரியார் போற்றுகின்றார், 
-
(சிவஞான சித்தியார் - அருணந்தி சிவாச்சாரியார்):
ஒருகோட்டன் இருசெவியன் மும்மதத்தன் நால்வாய் ஐங்கரத்தன் ஆறு
தருகோட்டம் பிறைஇதழித் தாழ்சடையான் தரும்ஒரு வாரணத்தின் தாள்கள்
உருகோட்டன்பொடும் வணங்கி ஒவாதே இரவுபகல் உணர்வோர் சிந்தைத்
திருகோட்டும் அயன்திருமால் செல்வமும் ஒன்றோ என்னச் செய்யும் தேவே!!!

(3)
'சிவபரம்பொருள் அருளியுள்ள ஆகமப் பொருளினின்றும் வழுவாத தன்மையில் இச்சாத்திரத்தின் விளக்கவுரைகள் அமைந்திட, பிரணவ முகத்துக் கடவுளான விக்னேஸ்வரரை உள்ளத்திலிருத்தித் தொழுவோம்' என்று 'மனவாசகம் கடந்தார்' பணிந்தேத்துகின்றார், 
-
(உண்மை விளக்கம் - மனவாசகம் கடந்தார்)
வண்மைதரும் ஆகமநூல் வைத்த பொருள்வழுவா
உண்மை விளக்கம் உரைசெய்யத் - திண்மதம்சேர்
அந்திநிறத் தந்திமுகத் தொந்திவயிற்(று) ஐங்கரனைப்
பந்தமறப் புந்தியுள் வைப்பாம்

(4)
'விநாயகப் பெருமானின் திருவடிகளைப் போற்றிப் பணிபவர்களது அஞ்ஞானம் விலகும்; வினைகள் சேராது' என்று அறிவுறுத்திப் பணிகின்றார் உமாபதி சிவாச்சாரியார். 
-
(சிவப்பிரகாசம் - உமாபதி சிவாச்சாரியார்):
ஒளியான திருமேனி உமிழ்தானம் மிகமேவு
களியார வரும்ஆனை கழல்நாளும் மறவாமல்
அளியாளும் மலர்தூவும் அடியார்கள் உளமான
வெளியாகும் வலிதாய வினைகூட நினையாவே

(5)
'விநாயகப் பெருமானின் திருவடிகளைப் பணிந்து போற்றுவோருக்கு மட்டுமே வேதாகம சாத்திரங்களின் உட்பொருள் எளிதில் சித்திக்கப் பெறும் ('ஏனையோருக்கு அவ்வுண்மைகள் புலப்படாது மறைந்திருக்கும்')' என்று தெளிவுறுத்திப் போற்றுகின்றார் உமாபதி சிவாச்சாரியார்,  
-
(திருவருட்பயன் - உமாபதி சிவாச்சாரியார்):
நற்குஞ்சரக் கன்று நண்ணில் கலைஞானம்
கற்கும் சரக்கன்று காண்

No comments:

Post a Comment