விநாயக வணக்கத்துடன் துவங்கும் கச்சியப்ப சிவாச்சாரியாரின் கந்தபுராணம்:

காஞ்சிபுரத்தில், சுமார் 10 முதல் 11ஆம் நூற்றாண்டு காலகட்டத்தில் ஆதி சைவ மரபில் தோன்றிய அருளாளர் கச்சியப்ப சிவாச்சாரியார். தமிழ்; வடமொழி இரண்டிலுமே பெரும் புலமை கொண்டிருந்த தகைமையாளர். சமய; விசேட; நிர்வாண தீட்சைகளுடன் ஆச்சாரிய அபிஷேக நிலையையும் எய்தியிருந்த பெருந்தகையார். தந்தையாரைத் தொடர்ந்து குமரக் கோட்டத் திருக்கோயிலில் அர்ச்சகராகவும் விளங்கி வழிபாடியற்றி வருகின்றார்.   

இப்பெருமகனாரின் கனவில் எழுந்தருளிச் செல்லும் குமரக் கோட்ட வேலவன், 'அன்பனே, வேத வியாசனின் வடமொழி ஸ்காந்த புராணத்திலுள்ள சங்கர சம்ஹிதையில், சிவரகசிய கண்டத்தின் முதல் ஆறு பகுதிகளைத் தமிழில் இயற்றுவாயாக' என்று கட்டளையிட்டு, 'திகட சக்கரச் செம்முகம் ஐந்துளான்' என்று அடியெடுத்தும் கொடுத்துப் பேரருள் புரிகின்றான். 

ஆறுமுகப் பெருமானின் திருவருள் திறத்தினை வியந்து போற்றும் கச்சியப்ப சிவாச்சாரியார், கந்தவேள் அளித்தருளிய முதலடியுடன் துவங்கும், பின்வரும் விகட சக்கர விநாயக வணக்கப் பாடலுடன் (10,345 திருப்பாடல்களைக் கொண்ட) கந்தபுராணத்தினை அருளிச் செய்கின்றார், 
-
(கந்தபுராணம் - விநாயக வணக்கத் திருப்பாடல்)
திகட சக்கரச் செம்முகம் ஐந்துளான்,
சகட சக்கரத் தாமரை நாயகன்,
அகட சக்கர இன்மணி யாவுறை
விகட சக்கரன் மெய்ப்பதம் போற்றுவாம்!!
-
(பொருள்)
இனி மேற்குறித்துள்ள திருப்பாடலின் ஒவ்வொரு வரிக்குமான பொருளையும் சிந்தித்து மகிழ்வோம்,
-
(திகட சக்கரச் செம்முகம் ஐந்துளான்)
திகழ்கின்ற தசக் கரங்களையும் (10 திருக்கரங்களையும்), ஐந்து திருமுகங்களையும் கொண்டருள்பவர் ஆதிப்பரம்பொருளான சிவபெருமான் 
-
(சகட சக்கரத் தாமரை நாயகன்)
சிவமூர்த்தி திரிபுர சம்ஹார காலத்தில் நால்வேதப் புரவிகள் பூட்டிய திருத்தேரில் எழுந்தருளிச் செல்லுகையில், அத்தேருக்கு சக்கரமாக விளங்கியவன் (தாமரை நாயகனான) சூரிய தேவன்
-
(அகட சக்கர இன்மணி யாவுறை)
'அகடு அசக்கரம்' என்பது பாடல் நயத்திற்காக அகட சக்கரமாயிற்று. 'அகடு' என்பது திருவயிற்றையும், 'அசக்கரம்' என்பது பெரியதொரு பாம்பையும் சுட்ட வந்தது. பிரணவ முக தெய்வமான விநாயகப் பெருமான் தனது திருவயிற்றில் பாம்பொன்றினை 'உதரபந்தனம்' எனும் ஆபரணமாகச் சூடியிருப்ப்பார். 'விக்னேஸ்வர மூர்த்தி விஸ்வரூப திருக்கோலத்துடன் தோன்றி அருள் புரிகையில், அளவில் மிக பிரமாண்டமாக விளங்கும் சூரிய கிரக தேவனும் அவருடைய திருவயிற்று ஆபரணத்தின் இடையிலுள்ள சிறுமணியெனத் திகழ்கின்றான்' என்பது இவ்வரியின் உட்கருத்து. 
-
(விகட சக்கரன் மெய்ப்பதம் போற்றுவாம்)
'இத்தகு சீர்மையும் மேன்மையும் பொருந்திய விகட சக்கர விநாயக மூர்த்தியின் பொன்னார்த் திருவடிகளைப் போற்றுவோம்' என்று கச்சியப்ப சிவாச்சாரியார் பணிந்தேத்துகின்றார். 

காஞ்சியின் தல விநாயகரான இம்மூர்த்தி ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயிலுள், இறைவரின் திருச்சன்னிதிக்கு செல்லும் பிரதான வழியில் அல்லாமல், ஆயிரங்கால் மண்டபத்தில்; இறைவர் விழாக்காலத்தில் வெளிவரும் கோபுர வாயிலுக்கு இடப்புறம் எழுந்தருளி இருக்கின்றார். கச்சி ஏகம்பமெனும் இவ்வாலயத்தினைத் தரிசிக்கச் செல்லுகையில் அவசியம் 'விகட சக்கர' விநாயகக் கடவுளைத் தரிசித்துப் பணிந்து நலமெலாம் பெற்று வாழ்வோம்.

No comments:

Post a Comment