விநாயக வணக்கத்துடன் துவங்கும் (5000 ஆண்டுகள் பழமையான) திருமந்திரம் (ஆதாரபூர்வ விளக்கங்கள்):

பன்னிரு சைவத் திருமுறைகளிலும், வெவ்வேறு காலகட்டங்களில் தோன்றியுள்ள எண்ணிறந்த அருளாளர்களின் திருப்பாடல்களிலும் விநாயகப் பெருமானைப் போற்றும் குறிப்புகள் இடம்பெற்றிருப்பினும், '7ஆம் நூற்றாண்டிற்கு முன்னதான காலகட்டத்தில் விநாயக வழிபாடு சிறப்புற்று விளங்கியிருக்கவில்லை' எனும் பொய்ப் பிரச்சாரத்தை நிறுவுவதிலேயே ஒரு சாராருக்கு அதீத ஆர்வம். இனி பதிவிற்குள் செல்வோம், 

7ஆம் நூற்றாண்டு அருளாளரான சுந்தர மூர்த்தி நாயனார் 'நம்பிரான் திருமூலன் அடியார்க்கும் அடியேன்' என்று  போற்றியிருப்பதனால் திருமூல நாயனார் சுந்தரருக்கு முற்பட்ட காலத்தவர் என்பது தெளிவு. 'எவ்வளவு ஆண்டுகள் முற்பட்டவர்?' எனும் வினாவிற்கான விடையினைப் பின்வரும் பெரிய புராணத் திருப்பாடல்கள் வாயிலாகச் சிந்தித்துத் தெளிவுறுவோம், 

(1)
'இப்புவியிலுள்ளோர் பிறவி நோயினின்றும் விடுபட்டு உய்வு பெறும் பொருட்டு, ஆண்டொன்றிற்கு ஒரு திருப்பாடல் வீதம், சரியை; கிரியை; யோகம்; ஞானமாகிய 4 மலர்களைக் கொண்டு, பரம்பொருளான சிவபெருமானைப் போற்றும் திருமந்திர மாலையினை அருளிச் செய்துள்ளார் திருமூலர்' என்று தெய்வச் சேக்கிழார் பதிவு செய்கின்றார், 
-
(பெரிய புராணம் - திருமூல தேவ நாயனார் புராணம்: திருப்பாடல் 26):
ஊனுடம்பில் பிறவிவிடம் தீர்ந்துலகத்தோருய்ய
ஞானமுதல் நான்குமலர் நல்திருமந்திர மாலை
பான்மைமுறை ஓராண்டுக்கொன்றாகப் பரம்பொருளாம்
ஏனஎயிறணிந்தாரை ஒன்றவன் தானென எடுத்து!!!

(2)
மேலும் பின்வரும் திருப்பாடலில், '(சிவயோகப் பயிற்சியினால்) மூவாயிரம் ஆண்டுகள் இப்புவியில் வாழ்ந்திருந்து, (ஆண்டொன்றிற்கு ஒரு திருப்பாடல் வீதம்) 3000 திருப்பாடல்களைக் கொண்ட திருமந்திர சாத்திர லை அருளிச் செய்துள்ளார் திருமூலர்' என்றும் சேக்கிழார் பெருமான் பதிவு செய்கின்றார், 
-
(பெரிய புராணம் - திருமூல தேவ நாயனார் புராணம்: திருப்பாடல் 27):
முன்னியஅப் பொருள்மாலைத் தமிழ் மூவாயிரம் சாத்தி
மன்னிய மூவாயிரத்தாண்டு இப்புவிமேல் மகிழ்ந்திருந்து
சென்னி மதியணிந்தார் தம் திருவருளால் திருக்கயிலை
தன்னில்அணைந்து ஒருகாலும் பிரியாமைத் தாளடைந்தார்.

ஆதலின் திருமூலர் '7ஆம் நூற்றாண்டிற்கும் 3000 ஆண்டுகள் முற்பட்ட அருளாளர் (அதாவது இன்றிலிருந்து சுமார் 4400 ஆண்டுகளுக்கு முன் தோன்றியவர்)' என்பது தெளிவு. 'கலியுகத்தின் துவக்க காலகட்டமே (அதாவது சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன்னர்) திருமூல நாயனாரின் அவதாரக் காலம்' என்பது ஆய்வாளர்களின் இறுதிக் கருத்து.

சிவபரம்பொருள் அருளிச் செய்துள்ள ருக்; யஜுர்; சாம; அதர்வண வேதங்களின் சாரத்தினைத் தமிழாக்கித் தருவதே திருமூலரின் அவதார நோக்கம் ('என்னை நன்றாக இறைவன் படைத்தனன் தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே' என்பது திருமந்திர வாக்கு). 'சிவயோகியான நம் திருமூலர் பிரணவமுகப் பெருங்கடவுளான விநாயகப் பெருமானைப் போற்றிய பின்னரே தன்னுடைய சாத்திர நூலை அருளிச் செய்துள்ளார்' எனில் தமிழர் மரபிலுள்ள விநாயக வழிபாட்டின் தொன்மை நன்கு விளங்குமன்றோ!
-
ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்தடி போற்றுகின்றேனே

No comments:

Post a Comment