விநாயக வணக்கத்துடன் துவங்கும் பெரிய புராணம்:

'என்ன பெரிய புராணம் விநாயக வணக்கத்துடன் துவங்குகின்றதா?', 'உலகெலாம் உணர்ந்து ஓதற்கரியவன்' எனும் துவக்கத் திருப்பாடல் தில்லைப் பரம்பொருளான நடராஜப் பெருமானையன்றோ போற்றுகின்றது? எனும் வினா எழுவது இயல்பே, இனி பதிவிற்குள் செல்வோம், 

(1)
தில்லைத் திருத்தலத்தில் சேக்கிழார் பெருமான் பெரிய புராண மாகாவியத்தை எழுதத் துவங்கும் சமயத்தில், பொன்னம்பலம் மேவும் சிற்சபேசப் பரம்பொருள் அசரீராய் 'உலகெலாம்' என்று அடியெடுத்துக் கொடுத்துப் பேரருள் புரிகின்றார். கூத்தர் பிரானின் பெருங்கருணையை நினைந்துருகிக் கண்ணீர் பெருக்கி, அடியெடுத்துக் கொடுத்த ஆடல்வல்லானைப் போற்றுமுகமாக முதல் திருப்பாடலை அருளிச் செய்கின்றார் தெய்வச் சேக்கிழார், 
-
(பெரிய புராணம் - திருமலைச் சருக்கம்: திருப்பாடல் 1)
உலகெலாம் உணர்ந்(து) ஓதற்கரியவன்
நிலவுலாவிய நீர்மலி வேணியன்
அலகில் சோதியன் அம்பலத்தாடுவான்
மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்

(2)
பின்னர் 2ஆம் திருப்பாடலில், தில்லையில் திருக்கூத்தியற்றும் பொன்னம்பலப் பரம்பொருளின் திருவடிகளைத் தரிசித்துத் தொழுவதே இப்பிறவிக் கடலினின்றும் மீள்வதற்கான அரியதொரு உபாயமென்று அறிவுறுத்துகின்றார், 
-
(பெரிய புராணம் - திருமலைச் சருக்கம்: திருப்பாடல் 2)
ஊனடைந்த உடம்பின் பிறவியே
தானடைந்த உறுதியைச் சாருமால்
தேனடைந்த மலர்ப்பொழில் தில்லையுள்
மாநடம் செய் வரதர் பொற்றாள்தொழ

(3)
மேற்குறித்துள்ள இரு திருப்பாடல்களும், 'அடியெடுத்துக் கொடுத்தருளிய முக்கண் முதல்வருக்கு நன்றி பாராட்டு முகமாக நம் சேக்கிழார் பெருமானின் உள்ளத்தினின்றும் வெளிப்பட்டுள்ளது' என்பது தெளிவு. இதனைத் தொடர்ந்து வரும் 3ஆம் திருப்பாடலில் பிரணவ முகத்துக் கடவுளான நம் விநாயகப் பெருமானைப் போற்றிப் பணிகின்றார் சேக்கிழார் அடிகள், 
-
(பெரிய புராணம் - திருமலைச் சருக்கம்: திருப்பாடல் 3)
எடுக்கும் மாக்கதை இன்தமிழ்ச் செய்யுளாய்
நடக்கும் மேன்மை நமக்கருள் செய்திடத்
தடக்கை ஐந்துடைத் தாழ்செவி நீள்முடிக்
கடக்களிற்றைக் கருத்துள் இருத்துவாம்
-
'பிறவிப் பிணியிலிருந்து யாவரையும் மீட்டெடுக்கவல்ல, திருத்தொண்டர்களைப் போற்றும் இம்மெய்மையான வரலாற்று நிகழ்வுகள் முழுவதும் அற்புதத் திருப்பாடல்களாய் அமைந்து வெளிப்பட்டு; யாவருக்கும் நன்மை செய்ய, ஐந்து திருக்கரங்களையும்; தாழ்ந்து அசையும் இரு திருச்செவிகளையும்; நீள்முடியையும் கொண்டருளும், மதம் பொருந்திய வேழ முகத்துக் கடவுளான விக்னேஸ்வரரின் திருவருளை வேண்டிப் பணிவோம்' என்று சேக்கிழார் பெருமானார் போற்றுகின்றார்.

No comments:

Post a Comment