ஒளவை தொழும் யானை முக தெய்வம் (நல்வழி; மூதுரை; கொன்றை வேந்தன்; ஆத்திச்சூடியில் விநாயக வணக்கப் பாடல்கள்):

தமிழ் மூதாட்டி என்று நம்மால் உரிமையோடும் அன்போடும் கொண்டாடப் பெறுபவர் ஒளவை. இத்திருப்பெயரிலேயே வெவ்வேறு காலகட்டங்களில் ஒரு பெண்ணின் நல்லாள் தோன்றி, தமிழ்ச் சமூகத்தினைப் பல்வேறு பரிமாணங்களில் செம்மைப் படுத்தி வந்துள்ளார் என்பர் சிலர். மற்றொரு சாரார் ஒரே ஒளவையே, சித்தர்களைப் போன்று, எண்ணிறந்த காலங்களுக்கு வாழ்ந்திருந்து; அவ்வப்பொழுது தோன்றி ஞான போதனைகளைச் செய்து வந்துள்ளார் என்பர். எதுவாயினும் ஒளவைக்கும் விநாயகப் பெருமானுக்குமான தொடர்பு மிகமிக இனிமையானது; தனித்துவமானது, விக்னேஸ்வர மூர்த்தியின் பூரணமான திருவருளைப் பெற்றிருந்தாள் நம் ஒளவையன்னை.  
-
இனி பொதுவில் குறிக்கப் பெறும் வெவ்வாறு காலகட்டத்து அவ்வையார்களின் பட்டியலைக் காண்போம், 
-
(1) சங்ககால ஒளவை: இவரே இளமைக் காலத்தில் விநாயகப் பெருமானை வேண்டி வடிவுறு மூப்பினை வரமாகப் பெற்ற தமிழ்ச் செல்வி, மூவேந்தர் தொடர்புடைய நிகழ்வுகளில் குறிக்கப் பெறும் தமிழன்னை. பெரும்பாலான வலைத்தளங்களில் சங்ககால அவ்வை 59 பாடல்களைப் பாடியுள்ளார் என்று பதிவு செய்கின்றனரே அன்றி, இளமையிலேயே முதுமை எய்தியிருந்த முக்கியக் குறிப்பினை, கவனக் குறைவாலோ அல்லது பிற காரணங்களினாலோ பதிவு செய்யாது விடுத்திருப்பது வருந்தத் தக்கது. வள்ளுவனாரின் திருக்குறளுக்கு, மதுரைப் பொற்றாமரைக் குளத்தில்; சங்கப் பலகையினை வரவழைத்து அரியதொரு அங்கீகாரம் கிடைக்கச் செய்தது இப்பெருமாட்டியே. 
-
(2) 2ஆம் ஒளவை: விநாயகர் அகவலெனும் அற்புதப் பனுவலை அருளிச் செய்தவர் இவரே. 
-
(3) 3ஆம் ஒளவை: ஆத்திச் சூடி; கொன்றை வேந்தன்; நல்வழி; மூதுரை முதலிய நூல்களைத் தந்தவர்
-
(4) 4ஆம் ஒளவை: மிகுதியான தனிப்பாடல் தொகுப்புகளைப் பாடியவர் இவரென்பார்.  

இனி 3ஆம் ஒளவையால் போற்றப் பெறும் விநாயக வணக்கத் திருப்பாடல்களை இப்பதிவில் சிந்தித்து மகிழ்வோம், 
-
(1)
(நல்வழி - விநாயக வணக்கப் பாடல்)
பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
நாலும் கலந்துனக்கு நான் தருவேன்; கோலம்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே; நீ எனக்குச்
சங்கத் தமிழ் மூன்றும் தா

(2)
(மூதுரை - விநாயக வணக்கப் பாடல்)
வாக்குண்டாம்; நல்ல மனமுண்டாம்; மாமலராள்
நோக்குண்டாம்; மேனி நுடங்காது பூக்கொண்டு
துப்பார் திருமேனித் தும்பிக்கையான் பாதம்
தப்பாமல் சார்வார் தமக்கு

(3)
(கொன்றை வேந்தன் - விநாயக வணக்கப் பாடல்)
கொன்றை வேந்தன் செல்வன் அடியினை
என்றும் ஏத்தித் தொழுவோம் யாமே.
-
(பொருள்)
கொன்றையைத் திருமுடியில் சூடும் சிவபரம்பொருளின் திருச்செல்வனான விநாயகப் பெருமானின் சிவஞானமேயாகிய திருவடிகளை என்றுமே போற்றிப் பணிவோம்

(4)
(ஆத்திச் சூடி)
ஆத்தி சூடி அமர்ந்த தேவனை
ஏத்தி ஏத்தித் தொழுவோம் யாமே
-
(பொருள்)
ஆத்தி மலரை அணிந்தருளும் சிவபரம்பொருளினால் பெரிதும் விரும்பப் பெறும் விநாயகப் பெருமானின் திருவடிகளைப் போற்றிப் பணிவோம் ('அமர்ந்த' எனும் சொல்லுக்கு - 'விரும்பிய' என்றொரு பொருளும் உண்டு).

No comments:

Post a Comment