வாரியார் சுவாமிகள் அருளியுள்ள காங்கேயநல்லூர் சுந்தர விநாயகர் பதிகம்:


பிரசித்தி பெற்ற காங்கேயநல்லூர் முருகன் திருக்கோயிலில் எழுந்தருளியுள்ள சுந்தர விநாயகரைப் போற்றி நம் வாரியார் சுவாமிகள் அருளியுள்ள திருப்பதிகப் பாடல்களை இப்பதிவில் சிந்தித்து மகிழ்வோம்,

(1)
ஐங்கரத்தால் ஐந்தொழிலும் ஆற்றுகின்ற 
ஆனை முகத்தரசே; எம் ஆதிமூர்த்தி 
இங்குனது கருணை எனக்கில்லையாயின் 
எங்கடைவேன் எவர்க்குரைப்பேன் யாது செய்வேன் 
செங்கைநிறை ஆமலகக் கனிபோல் உன்றன் 
திருவருள் தந்தருள் புரிவாய் தேவ தேவே 
துங்கமிகு காங்கேயநல்லூர் மேவும் 
சுந்தர விநாயக மெய்த் துரிய வாழ்வே! 
-
(பொருள்: ஆமலகக் கனி - நெல்லிக்கனி)

(2)
கதியுதவு கணநாத; கருணைக் குன்றே 
கற்பகமே; கற்பகத் தீங்கனியே; கங்கை 
நதியுதவு திருமைந்த; நம்பியாண்டார் 
நவிலும் நறும் தமிழ்க்கவியை நயந்த தேவே 
விதியுதவு பிறவிதனை வேண்டேன் உன்றன் 
விரைமலர்த்தாள் வேண்டினனால்; வேத கீதத் 
துதியுதவு காங்கேயநல்லூர் மேவும் 
சுந்தர விநாயக மெய்த் துரிய வாழ்வே!!!

No comments:

Post a Comment