நம்பியாண்டார் நம்பிகள் போற்றும் திருநாரையூர் பொள்ளாப் பிள்ளையார்:

சிதம்பரத்திலிருந்து 18 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது திருநாரையூர், திருஞானசம்பந்தர் மற்றும் நாவுக்கரசு சுவாமிகளால் பாடல் பெற்றுள்ள சிறப்புப் பொருந்தியது. அடிப்படையில் சிவத்தலமாக விளங்கும் இவ்வாலயத்தில் விநாயகப் பெருமான் 'பொள்ளாப் பிள்ளையார்' எனும் திருநாமத்துடன் ஆச்சரியமாய் எழுந்தருளி இருக்கின்றார். 'பொள்ளா' எனும் பதம் 'உளியால் செதுக்கப்படாத சுயம்புத் தன்மையை' குறிக்க வந்தது, இம்மூர்த்தியின் திருநாமம் நாளடைவில் மருவி 'பொல்லாப் பிள்ளையார்' என்று தற்பொழுது பிரசித்தமாக அறியப்பட்டு வருகின்றார்.

பன்னிரு சைவத் திருமுறைகளுள், 11 திருமுறைகள் வரையிலும் தொகுத்தளித்தவராகவும், 11ஆம் திருமுறையின் ஆசிரியர்களுள் ஒருவராகவும் விளங்கும் நம்பியாண்டார் நம்பிகளின் அவதாரத் தலமாகவும் இத்திருத்தலம் திகழ்கின்றது. சிறு பிராயத்தில், நிவேதன உணவினைப் பொல்லாப் பிள்ளையார் ஏற்கவில்லையே என்று பெரிதும் ஏங்கி வருத்தமுற்றுத் தன் இன்னுயிரையும் மாய்க்கத் துணிந்த நாள் முதல், அனுதினமும் நேரில் தோன்றி நம்பிகளுடன் உரையாடியவாறே நிவேதன உணவை உண்டு அருள் புரிவாராம் இப்பொல்லாப் பிள்ளையார். 
அது மட்டுல்லாது, பால்ய பருவத்திலிருந்தே நம்பிகளைத் தம்முடைய சீடராகவும் ஏற்று ஞானாசிரியராகவும் விளங்கிப் பேரருள் புரிந்துள்ளார் இப்பிள்ளையார். அடியார்க்கு எளியரான இம்மூர்த்தியே 'தேவாரத் திருமுறைகள் தில்லைத் திருக்கோயிலில், திருக்காப்பிட்ட ஓர் அறையினுள் இருப்பதனை' நம்பிகளுக்கு அறிவித்து அருள் புரிந்தவர். நம்பிகள் இப்பிள்ளையாருக்கென 20 திருப்பாடல்களால் கோர்க்கப்பெற்றுள்ள 'திருநாரையூர் விநாயகர் திருஇரட்டைமணி மாலை' எனும் அரிய பாடல் தொகுப்பினை 11ஆம் திருமுறையில் அருளிச் செய்துள்ளார்.
-
(திருநாரையூர் விநாயகர் திருஇரட்டைமணி மாலை - திருப்பாடல் 1):
என்னை நினைந்தடிமை கொண்டென் இடர்கெடுத்துத்
தன்னை நினையத் தருகின்றான் - புன்னை
விரசுமகிழ் சோலை வியன் நாரையூர் முக்கண்
அரசு மகிழ் அத்தி முகத்தான்
-
(திருநாரையூர் விநாயகர் திருஇரட்டைமணி மாலை - திருப்பாடல் 7):
மருப்பையொரு கைக்கொண்டு நாரையூர் மன்னும்
பொருப்பையடி போற்றத் துணிந்தால் - நெருப்பை
அருந்த எண்ணுகின்ற எறும்பன்றே அவரை
வருந்த எண்ணுகின்ற மலம்

No comments:

Post a Comment