ஒளவை தொழும் யானை முக தெய்வம் (நல்வழி; மூதுரை; கொன்றை வேந்தன்; ஆத்திச்சூடியில் விநாயக வணக்கப் பாடல்கள்):

தமிழ் மூதாட்டி என்று நம்மால் உரிமையோடும் அன்போடும் கொண்டாடப் பெறுபவர் ஒளவை. இத்திருப்பெயரிலேயே வெவ்வேறு காலகட்டங்களில் ஒரு பெண்ணின் நல்லாள் தோன்றி, தமிழ்ச் சமூகத்தினைப் பல்வேறு பரிமாணங்களில் செம்மைப் படுத்தி வந்துள்ளார் என்பர் சிலர். மற்றொரு சாரார் ஒரே ஒளவையே, சித்தர்களைப் போன்று, எண்ணிறந்த காலங்களுக்கு வாழ்ந்திருந்து; அவ்வப்பொழுது தோன்றி ஞான போதனைகளைச் செய்து வந்துள்ளார் என்பர். எதுவாயினும் ஒளவைக்கும் விநாயகப் பெருமானுக்குமான தொடர்பு மிகமிக இனிமையானது; தனித்துவமானது, விக்னேஸ்வர மூர்த்தியின் பூரணமான திருவருளைப் பெற்றிருந்தாள் நம் ஒளவையன்னை.  
-
இனி பொதுவில் குறிக்கப் பெறும் வெவ்வாறு காலகட்டத்து அவ்வையார்களின் பட்டியலைக் காண்போம், 
-
(1) சங்ககால ஒளவை: இவரே இளமைக் காலத்தில் விநாயகப் பெருமானை வேண்டி வடிவுறு மூப்பினை வரமாகப் பெற்ற தமிழ்ச் செல்வி, மூவேந்தர் தொடர்புடைய நிகழ்வுகளில் குறிக்கப் பெறும் தமிழன்னை. பெரும்பாலான வலைத்தளங்களில் சங்ககால அவ்வை 59 பாடல்களைப் பாடியுள்ளார் என்று பதிவு செய்கின்றனரே அன்றி, இளமையிலேயே முதுமை எய்தியிருந்த முக்கியக் குறிப்பினை, கவனக் குறைவாலோ அல்லது பிற காரணங்களினாலோ பதிவு செய்யாது விடுத்திருப்பது வருந்தத் தக்கது. வள்ளுவனாரின் திருக்குறளுக்கு, மதுரைப் பொற்றாமரைக் குளத்தில்; சங்கப் பலகையினை வரவழைத்து அரியதொரு அங்கீகாரம் கிடைக்கச் செய்தது இப்பெருமாட்டியே. 
-
(2) 2ஆம் ஒளவை: விநாயகர் அகவலெனும் அற்புதப் பனுவலை அருளிச் செய்தவர் இவரே. 
-
(3) 3ஆம் ஒளவை: ஆத்திச் சூடி; கொன்றை வேந்தன்; நல்வழி; மூதுரை முதலிய நூல்களைத் தந்தவர்
-
(4) 4ஆம் ஒளவை: மிகுதியான தனிப்பாடல் தொகுப்புகளைப் பாடியவர் இவரென்பார்.  

இனி 3ஆம் ஒளவையால் போற்றப் பெறும் விநாயக வணக்கத் திருப்பாடல்களை இப்பதிவில் சிந்தித்து மகிழ்வோம், 
-
(1)
(நல்வழி - விநாயக வணக்கப் பாடல்)
பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
நாலும் கலந்துனக்கு நான் தருவேன்; கோலம்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே; நீ எனக்குச்
சங்கத் தமிழ் மூன்றும் தா

(2)
(மூதுரை - விநாயக வணக்கப் பாடல்)
வாக்குண்டாம்; நல்ல மனமுண்டாம்; மாமலராள்
நோக்குண்டாம்; மேனி நுடங்காது பூக்கொண்டு
துப்பார் திருமேனித் தும்பிக்கையான் பாதம்
தப்பாமல் சார்வார் தமக்கு

(3)
(கொன்றை வேந்தன் - விநாயக வணக்கப் பாடல்)
கொன்றை வேந்தன் செல்வன் அடியினை
என்றும் ஏத்தித் தொழுவோம் யாமே.
-
(பொருள்)
கொன்றையைத் திருமுடியில் சூடும் சிவபரம்பொருளின் திருச்செல்வனான விநாயகப் பெருமானின் சிவஞானமேயாகிய திருவடிகளை என்றுமே போற்றிப் பணிவோம்

(4)
(ஆத்திச் சூடி)
ஆத்தி சூடி அமர்ந்த தேவனை
ஏத்தி ஏத்தித் தொழுவோம் யாமே
-
(பொருள்)
ஆத்தி மலரை அணிந்தருளும் சிவபரம்பொருளினால் பெரிதும் விரும்பப் பெறும் விநாயகப் பெருமானின் திருவடிகளைப் போற்றிப் பணிவோம் ('அமர்ந்த' எனும் சொல்லுக்கு - 'விரும்பிய' என்றொரு பொருளும் உண்டு).

விநாயக வணக்கத்துடன் துவங்கும் குமரகுருபரரின் பாடல் தொகுப்புகள்:

17ஆம் நூற்றாண்டில் தோன்றிய அருளாளர் குமரகுருபரர், அவதாரக் காலம் 63 ஆண்டுகள் (1625 - 1688). அவதாரத் தலம் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஸ்ரீவைகுண்டம் எனும் தலத்திற்கு வடபால் அமைந்துள்ள ஸ்ரீகைலாசம் எனும் பகுதி. தன்னுடைய 6ஆம் வயதில் செந்தூர் வேலவனின் பேரருளால் பேச்சுத் திறன் பெற்று 'கந்தர் கலி வெண்பா' எனும் பாமாலையை அருளிச் செய்தவர். இவர் மதுரையில்; திருமலை நாயக்கரின் சபையில் அரங்கேற்றிய மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்ப் பாடல்களை, உலகீன்ற மீனாட்சி அன்னையே, சிறு பெண் குழந்தையொன்றின் வடிவில் எழுந்தருளி வந்து; நாயக்க மன்னரின் மடிமீது அமர்ந்திருந்து கேட்டருளினாள் எனில் குமரகுருபர சுவாமிகளின் தவச்சிறப்பினை என்னென்று போற்றுவது.      

தருமை ஆதீனத்தின் 4ஆம் குருமூர்த்திகளான ஸ்ரீமாசிலாமணித் தேசிகரை ஞானசிரியராகக் கொண்டு அப்பெருமகனாருக்குத் திருவடித் தொண்டு புரிந்து வந்தார் சுவாமிகள். பின்னர் குருநாதரின் கட்டளையினை ஏற்றுக் காசித் திருத்தலத்தில் பன்னெடுங்காலம் திருத்தொண்டு புரிந்து வந்தார், இவரின் முத்தித் தலமும் காசியே. குருபூஜைத் திருநாள் வைகாசி மாதத் தேய்பிறையில் வரும் திருதியைத் திதி (அதாவது வைகாசி மாத பௌர்ணமியை அடுத்த 3ஆம் நாளில் வரும் திருதியைத் திதி) .

சுவாமிகள் அருளிச் செய்துள்ள 16 பாடல் தொகுப்புகளில், 'கயிலைக் கலம்பகம்; காசித் துண்டி விநாயகர் பதிகம்' எனும் இவ்விரு தொகுப்புகளும் நமக்கின்று கிடைக்கப் பெறவில்லை. மீதமுள்ள 14 தொகுப்புகளில், 8 தொகுப்புகள் விநாயக வணக்கத் திருப்பாடலுடன் துவங்குகின்றன, அவற்றுள், பதிவின் நீளம் கருதி, 'மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்' மற்றும் 'வைத்தீசுவரன் கோயில் ஸ்ரீமுத்துக் குமார சுவாமி பிள்ளைத் தமிழ்' எனும் இவ்விரு தொகுப்புகளையும் விடுத்து, ஏனைய 6 தொகுப்புகளின் விநாயக வணக்கத் திருப்பாடல்களை இப்பதிவில் சிந்தித்து மகிழ்வோம், 

1. கயிலைக் கலம்பகம் (இந்நூல் நமக்கின்று கிடைக்கப் பெறவில்லை)
2. காசிக் கலம்பகம் 
3. காசித் துண்டி விநாயகர் பதிகம்  (இந்நூல் நமக்கின்று கிடைக்கப் பெறவில்லை)
4. சகலகலாவல்லி மாலை 
5. சிதம்பர மும்மணிக் கோவை 
6. சிதம்பரச் செய்யுட் கோவை 
7. திருச்செந்தூர்க் கந்தர் கலிவெண்பா 
8. திருவாரூர் நான்மணிமாலை
9. தில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை
10. நீதிநெறி விளக்கம் 
11. பண்டார மும்மணிக் கோவை
12. மதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை
13. மீனாட்சியம்மை குறம் 
14. மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் 
15. மதுரைக் கலம்பகம் 
16. வைத்தீசுவரன் கோயில் ஸ்ரீமுத்துக் குமார சுவாமி பிள்ளைத் தமிழ் 

(1)
(காசிக் கலம்பகம் - விநாயக வணக்கப் பாடல்)
பாசத் தளையறுத்துப் பாவக் கடல்கலக்கி
நேசத் தளைப்பட்டு நிற்குமே - மாசற்ற
காரார் வரையீன்ற கன்னிப்பிடி அளித்த
ஓரானை வந்தென் உளத்து
-
(இறுதி இரு வரிகளின் பொருள்)
வரையீன்ற (மலைமகளான) கன்னிப் பிடி ('பெண் யானை' போன்ற) உமையன்னை அளித்தருளிய விநாயகக் கடவுளை உள்ளத்தில் இருத்தித் தொழுவோம்

(2)
(சிதம்பர மும்மணிக்கோவை - விநாயக வணக்கப் பாடல்)
செம்மணிக்கோவைக் கதிர்சூழ் தில்லைச் சிற்றம்பலவன்
மும்மணிக்கோவைக்கு வந்து முன்னிற்கும் - எம்மணிக்கோ
அஞ்சக்கரக் கற்பகத்தார் இறைஞ்சும்; அஞ்சு
கஞ்சக்கரக் கற்பகம்

(3)
(திருவாரூர் நான்மணி மாலை - விநாயக வணக்கப் பாடல்)
நாடும் கமலேசர் நான்மணி மாலைக்கு மிகப்
பாடும் கவிதைநலம் பாலிக்கும் - வீடொன்ற
முப்போதகத்தின் முயல்வோர்க்கு முன்னிற்கும்
கைப் போதகத்தின் கழல்

(4)
(பண்டார மும்மணிக் கோவை - விநாயக வணக்கப் பாடல்)
எண்திசைக்கும் சூளாமணி மாசிலாமணிசீர்
கொண்டிசைக்கு(ம்) மும்மணிக் கோவைக்குக் கண்டிகைபொற்
பைந்நாகத்தான் அனத்தான் பாற்கடலான் போற்றஅருள்
கைந்நாகத்(து) ஆனனத்தான் காப்பு
-
தன்னுடைய குருநாதரான, தருமை ஆதீனத்தின் 4ஆம் குருமூர்த்திகளான ஸ்ரீமாசிலாமணித் தேசிகரைப் போற்று முகமாக அருளிச் செய்துள்ள பாமாலையிது. 

(5)
(மதுரை மீனாட்சியம்மை குறம் - விநாயக வணக்கப் பாடல்)
கார்கொண்ட பொழில்மதுரைக் கர்ப்பூரவல்லி மணம் கமழும் தெய்வத்
தார்கொண்ட கருங்குழல் அங்கயற்கண் நாயகிகுறம் செந்தமிழால் பாட
வார்கொண்ட புகர்முகத்(து) ஐங்கரத்(து) ஒருகோட்(டு) இருசெவி மும்மதத்து நால்வாய்ப்
போர்கொண்ட கவுள்சிறுகண் சித்திவிநாயகன் துணைத்தாள் போற்றுவாமே.

(6)
(மதுரைக் கலம்பகம் - விநாயக வணக்கப் பாடல்)
புந்தித் தடத்துப் புலக்களிறோடப் பிளிறுதொந்தித்
தந்திக்குத் தந்தை தமிழ்க்குத(வு) என்ப(து)என்; தண்ணளிதூய்
வந்திப்பதும்தனி வாழ்த்துவதும் முடி தாழ்த்துநின்று
சிந்திப்பதுமன்றிச் சித்தி விநாயகன் சேவடியே

அபிராமி பட்டர் போற்றும் யானை முக தெய்வம் (அபிராமி அந்தாதியின் விநாயக வணக்கப் பாடல்):

18ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில், தமிழகத்தின் தவப்பயனாய் அவதரித்த அருளாளர் அபிராமி பட்டர். அவதாரத் தலம் திருக்கடையூர். இயற்பெயர் சுப்பிரமணியர். முதலாம் சரபோஜி மன்னரின் முன்னிலையில், 100 திருப்பாடல்களைக் கொண்ட 'அபிராமி அந்தாதி' எனும் ஒப்புவமையற்ற செந்தமிழ்ப் பனுவலை அருளிச் செய்து, அபிராமி அன்னையின் திருவருளால் அமாவாசையன்று முழுநிலவைத் தோன்றுமாறு செய்வித்த உத்தம சீலர். 

சீர்மிகு சைவ மரபில், அருளாளர்கள் எந்தவொரு தெய்வத்தைப் போற்றுவதாக இருப்பினும், முதல் வணக்கத்தினை பெற்றருள்பவர் நம் விநாயகப் பெருமானன்றோ! அபிராமி பட்டரும் அம்முறையிலேயே காதலோடு விக்னேஸ்வர மூர்த்தியைப் போற்றிப் பரவி ஆசி பெற்ற பின்னரே தன்னுடைய பனுவலைத் துவங்குகின்றார்.

(அபிராமி அந்தாதி - விநாயகர் காப்புப் பாடல்)
தாரமர் கொன்றையும் சண்பக மாலையும் சாத்தும்தில்லை
ஊரர் தம் பாகத்(து) உமைமைந்தனே! உலகேழும் பெற்ற
சீர்அபிராமி அந்தாதி எப்போதும் என் சிந்தையுள்ளே
காரமர் மேனிக் கணபதியே; நிற்கக் கட்டுரையே!!!

வாரியார் சுவாமிகள் அருளியுள்ள காங்கேயநல்லூர் சுந்தர விநாயகர் பதிகம்:


பிரசித்தி பெற்ற காங்கேயநல்லூர் முருகன் திருக்கோயிலில் எழுந்தருளியுள்ள சுந்தர விநாயகரைப் போற்றி நம் வாரியார் சுவாமிகள் அருளியுள்ள திருப்பதிகப் பாடல்களை இப்பதிவில் சிந்தித்து மகிழ்வோம்,

(1)
ஐங்கரத்தால் ஐந்தொழிலும் ஆற்றுகின்ற 
ஆனை முகத்தரசே; எம் ஆதிமூர்த்தி 
இங்குனது கருணை எனக்கில்லையாயின் 
எங்கடைவேன் எவர்க்குரைப்பேன் யாது செய்வேன் 
செங்கைநிறை ஆமலகக் கனிபோல் உன்றன் 
திருவருள் தந்தருள் புரிவாய் தேவ தேவே 
துங்கமிகு காங்கேயநல்லூர் மேவும் 
சுந்தர விநாயக மெய்த் துரிய வாழ்வே! 
-
(பொருள்: ஆமலகக் கனி - நெல்லிக்கனி)

(2)
கதியுதவு கணநாத; கருணைக் குன்றே 
கற்பகமே; கற்பகத் தீங்கனியே; கங்கை 
நதியுதவு திருமைந்த; நம்பியாண்டார் 
நவிலும் நறும் தமிழ்க்கவியை நயந்த தேவே 
விதியுதவு பிறவிதனை வேண்டேன் உன்றன் 
விரைமலர்த்தாள் வேண்டினனால்; வேத கீதத் 
துதியுதவு காங்கேயநல்லூர் மேவும் 
சுந்தர விநாயக மெய்த் துரிய வாழ்வே!!!

தமிழ் மொழியை முதன் முதலில் அருளிய விநாயகப் பெருமான் (ஆதாரபூர்வ விளக்கங்கள்):

இயல்; இசை; நாடகம் எனும் முத்தமிழின் முறைமைகள் முழுவதையும், எண்ணில் பலயுகங்களுக்கு முன்னரே, தன் திருக்கரங்களால் முதன் முதலில் எழுதி அருளியவர் பிரணவ முகத்து தெய்வமான நம் விநாயகப் பெருமானாவார். அருணகிரிப் பெருமான் 'கைத்தல நிறைகனி' திருப்புகழில் இவ்வரிய செய்தியினைப் பதிவு செய்து போற்றுகின்றார்,
-
முத்தமிழ் அடைவினை முற்படு கிரிதனில்
முற்பட எழுதிய முதல்வோனே

மிகமிக முற்பட்ட காலகட்டத்து நிகழ்வாதலால் 'முற்பட எழுதிய' என்று அருணகிரியார் குறிக்கின்றார். அதாவது, 'சிவபெருமான் அகத்தியருக்கு தமிழ் மொழியினை அருளு முன்னரே', 'அகத்தியர் தென்பகுதிக்கு வருகை புரிவதற்கு முன்னரே'. 

'முற்படு கிரிதனில் முற்பட எழுதிய' எனும் வரி 'மகாபாரதம் எழுதிய நிகழ்வையே குறிக்கின்றது' என்று தவறாகப் பொருள் கொள்வோரும் உண்டு. திருமுருக வாரியார் சுவாமிகள் உள்ளிட்ட சமயச் சான்றோர் யாவரும், இத்திருப்பாடலுக்கான தத்தமது விளக்கவுரைகளில் 'முத்தமிழின் முறைமைகளை விக்னேஸ்வர மூர்த்தி எழுதியதாகவே' தெளிவுறுத்தியுள்ளனர். 

மேலும் மகாபாரதம் எழுதப் பெற்றிருப்பதோ வடமொழியில், 'முத்தமிழ்' எனும் தெளிவான குறியீட்டினை வடமொழியென்று பொருள் காண்பது எவ்விதத்திலும் பொருந்தாது.

மற்றொருபுறம், 'விக்னேஸ்வர மூர்த்தி பாரதம் எழுதிய நிகழ்வினை' தம்முடைய திருப்பாடல்கள் தோறும் 'பாரதம்' என்று, இதிகாசப் பெயரைக் குறிப்பிட்டே பதிவு செய்து வரும் அருணகிரியாரின் பாடல் நடையினையும் உணர்ந்து தெளிவுறுவோம், 

('மாய வாடை' எனத் துவங்கும் திருச்செந்தூர் திருப்புகழ்),
பாயு மாமத தந்தி முகம்பெறும்
ஆதி பாரதமென்ற பெரும்கதை
பார மேருவிலன்று வரைந்தவன் இளையோனே!!!

('குகையில் நவ நாதரும்' என்று துவங்கும் பொதுத் திருப்புகழ்), 
பகைகொள் துரியோதனன் பிறந்து
     படைபொருத பாரதம் தெரிந்து
          பரியதொரு கோடு கொண்டு சண்ட ...வரைமீதே
-
பழுதற வியாசன் அன்றியம்ப
     எழுதிய விநாயகன் சிவந்த
          பவள மதயானை பின்பு வந்த ...முருகோனே

முத்தமிழை முதன்முதலில் நமக்கருளிய, பன்னெடுங்காலமாய்த் தமிழர் உள்ளிட்ட பாரத தேசத்தினர் அனைவரின் வழிபடு தெய்வமாக விளங்கி வரும் நம் விக்னேஸ்வர மூர்த்தியை, வடநாட்டு தெய்வமென்று பிரிவினை பேசியுழல்வது மடமையினும் மடமையன்றோ!!!

வித்தக மருப்புடைய பெருமாளே:

சைவ மரபின் தோத்திரப் பாடல்களில் 'பெருமாளே' எனும் தனித்துவமான; இனிமையான சொல்லாடலைத் துவக்கி வைத்தவர் நம் தலைவரான அருணகிரிப் பெருமானேயாவார். அருணகிரியாரின் அவதாரக் காலத்திற்கு முன்னர் வரையிலும் சைவத் திருமுறைகளிலும்; பனுவல்களிலும் 'பெருமானே' எனும் சொற்பிரயோகமே பொதுவில் கைக்கொள்ளப் பெற்று வந்துள்ளது (சில உதாரணங்கள்: 'பெம்மான் இவனன்றே', 'பித்தா பிறைசூடி பெருமானே'). பெரிய புராணத் திருப்பாடலொன்றில், தியாகேச மூர்த்தியை 'தெய்வப் பெருமாள்' என்று அரிதாகக் குறிக்கின்றார் நம் சேக்கிழார் அடிகள்,
-
(பெரிய புராணம்: நமிநந்திஅடிகள் புராணம்: திருப்பாடல் 29)
தெய்வப் பெருமாள் திருவாரூர்ப்
   பிறந்து வாழ்வார் எல்லாரும்
மைவைத்தனைய மணிகண்டர்
   வடிவேயாகிப் பெருகொளியால்
மொய்வைத்தமர்ந்த மேனியராம்
   பரிசு கண்டு முடிகுவித்த
கைவைத்தஞ்சி அவனிமிசை
   விழுந்து பணிந்து களிசிறந்தார்

அருணகிரிப் பெருமான் எண்ணிலடங்கா திருப்பாடல்களில் ஆறுமுகக் கடவுளை 'பெருமாளே' என்று போற்றி மகிழ்கின்றார். மேலும் முழுமுதற் பொருளான நம் விநாயகப் பெருமானையும் 4 திருப்பாடல்களில் அவ்விதமே அகம்குளிரப் போற்றுகின்றார்.

விக்னேஸ்வர மூர்த்திக்கென அருளிச் செய்துள்ள 5 தனித் திருப்பாடல்களுள், பின்வரும் 4 திருப்பாடல்களில் 'பெருமாளே' என்று வேழ முகத்து இறைவனைப் பணிந்தேத்துகின்றார்,
-
1. 'கைத்தல நிறைகனி' என்று துவங்கும் திருப்பாடல் (அக்கண மணமருள் பெருமாளே)
-
2. 'பக்கரை விசித்திரமணி' என்று துவங்கும் திருப்பாடல் (வித்தக மருப்புடைய பெருமாளே)
-
3. 'உம்பர் தரு' என்று துவங்கும் திருப்பாடல் (ஐந்து கரத்தானைமுகப் பெருமாளே)
-
4. 'நினது திருவடி' என்று துவங்கும் திருப்பாடல் (எதிரும் நிசிசரரைப் பலியிட்டருள் பெருமாளே)
-
5. 'விடமடைசு வேலை' என்று துவங்கும் திருப்பாடல் (அறிவருளும் ஆனை முகவோனே)

தந்ததனத் தானதனத் ...... தனதான
     தந்ததனத் தானதனத் ...... தனதான
-
உம்பர்தருத் தேநுமணிக் கசிவாகி
     ஒண்கடலில் தேனமுதத்துணர்வூறி
-
இன்பரசத்தே பருகிப் பலகாலும்
     எந்தன் உயிர்க்காதரவுற்றருள்வாயே
-
தம்பி தனக்காக வனத்தணைவோனே
     தந்தை வலத்தால் அருள்கைக் கனியோனே
-
அன்பர் தமக்கான நிலைப் பொருளோனே
     ஐந்து கரத்தானைமுகப் பெருமாளே!!!

அடியவர்க்கு அருளும் ஞானத் தொப்பை விநாயகர்:

'இருநோய் மலத்தை' என்று துவங்கும் பொதுத் திருப்புகழில், 'பிறவியாகிய பெருநோயை அறுத்தருள்பவரும், துன்பங்கள் யாவையும் பொடிப்பொடியாகுமாறு செய்தருள்பவரும், தனக்கேஉரிய தனித்துவமான முறையில் அடியவர்களுக்குப் பேரருள் புரிபவரும், சிவஞானமேயான தொப்பையை உடையவருமாகிய விக்கின விநாயகப் பெருங்கடவுள் மகிழும் வேலாயுத தெய்வமே' என்று சிவகுமாரர்களைப் போற்றி மகிழ்கின்றார் நம் அருணகிரியார். 
-
கருநோய் அறுத்தெனது மிடிதூள் படுத்திவிடு
     கரிமா முகக்கடவுள் அடியார்கள்
-
கருதா வகைக்குவரம் அருள்ஞான தொப்பைமகிழ்
     கருணா கடப்பமலர் அணிவோனே!!!